சென்னை பாரதிய வித்யா பவனில் நடந்த விழாவில், பாபநாசம் ருக்மிணி ரமணி எழுதிய ‘சகல தேவதாப்ரியா - 72 மேளகர்த்தா கிருதிகள்’ எனும் நூலை மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி வெளியிட, கர்னாடக இசை பாடகர் நெய்வேலி சந்தானகோபாலன் பெற்றுக்கொண்டார். அருகில் ருக்மிணி ரமணி, பாரதிய வித்யா பவன் தலைவர் என்.ரவி, இயக்குநர் கே.என்.ராமசாமி, பாபநாசம் அசோக் ரமணி ஆகியோர். 
வலைஞர் பக்கம்

இசை, நடனத் துறைக்கு சிறந்த சேவையாற்றும் ருக்மிணி ரமணி: நூல் வெளியீட்டில் கோபாலகிருஷ்ண காந்தி புகழாரம்

செய்திப்பிரிவு

சென்னை: பாபநாசம் சிவனின் மகளான ருக்மிணி ரமணி கடந்த 70 ஆண்டுகளாக இசை, நடனத் துறைக்கு ஆற்றிவரும் சேவையை பாராட்டி அவரை கவுரவிக்கும் நிகழ்ச்சி சென்னை பாரதிய வித்யா பவனில் நடந்தது.

பாபநாசம் சிவன் ரசிகர் சங்கம், சிவானுக்ரகா அறக்கட்டளை ஆகியவை பாரதிய வித்யாபவனுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தின. இதில் மேற்கு வங்கமுன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். ருக்மிணி ரமணி எழுதிய ‘சகல தேவதாப்ரியா - 72 மேளகர்த்தா கிருதிகள்’ எனும் நூலை அவர் வெளியிட, கர்னாடக இசை பாடகர் நெய்வேலி சந்தானகோபாலன் பெற்றுக் கொண்டார்.

விழாவில் கோபாலகிருஷ்ண காந்தி பேசியதாவது: பாபநாசம் சிவன் எனும் மகத்தான ஆளுமையின் மகளாகவும், அவரது இசைத்திறமை, பாடல் எழுதும் திறமையின் வாரிசாகவும் இருப்பவர் ருக்மிணி ரமணி. இசை, நாட்டியத் துறைக்கு அளப்பரிய சேவைகளை செய்துள்ளார். இவரை பாராட்டி கவுரவித்ததையும், இவரது நூலை வெளியிட்டதையும் எனக்கு கிடைத்த பெரிய பாக்கியமாக கருதுகிறேன்.

நாட்டிய துறைக்கு பெரும் பங்களிப்பை வழங்கி கலாஷேத்ரா எனும் அமைப்பை தோற்றுவித்த ருக்மிணிஅருண்டேலை கொண்டாடுவதுபோல, நாம் கொண்டாட வேண்டிய இன்னொருவர் ருக்மிணி ரமணி. இவ்வாறு அவர் பேசினார். பாரதிய வித்யா பவன் தலைவர் என்.ரவி, இயக்குநர் கே.என்.ராமசாமி, சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, கர்னாடக இசை பாடகர் பாபநாசம் அசோக் ரமணிஉள்ளிட்டோர் பங்கேற்றனர்.

‘சகல தேவதாப்ரியா - 72 மேளகர்த்தா கிருதிகள்’ நூலில் 32 தெய்வங்களை போற்றும் பாடல்களை ருக்மிணி ரமணி எழுதியுள்ளதாக ராதா பாஸ்கர் தெரிவித்தார்.அப்பாடல்களை கே.காயத்ரி, வித்யா கல்யாணராமன், கடலூர் எஸ்.ஜே.ஜனனி, பிருந்தா மாணிக்கவாசகன் ஆகியோர் விழாவில் பாடினர்.

SCROLL FOR NEXT