வார ராசிபலன்கள்

மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ டிச.11 - 17

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மகரம்: (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள்) கிரகநிலை- தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி, ராகு - சப்தம ஸ்தானத்தில் குரு(வ) - அஷ்டம ஸ்தானத்தில் கேது - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் புதன் - லாப ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன் - விரைய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் பண வரத்து சீராக இருக்கும். வேலைப் பளு காரணமாக நேரம் தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்பட்டு நீங்கும். கை, கால் வலி, உடல் சோர்வு உண்டாகலாம். அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் ஏற்பட்டு சரியாகும். கவுரவம் பாதிக்கும்படியான சூழ்நிலை வரலாம். தொழில் வியாபாரத்தில் பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். இயந்திரங்கள், ஆயுதங்கள், நெருப்பு ஆகியவற்றை கையாளும் தொழிலாளர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் பிரச்சனைகள் அதனால் வாக்குவாம் போன்றவை உண்டாகும். கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேற்று ஏற்படலாம். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

சிலர் குடும்பத்தை விட்டு பிரிந்து வெளியில் தங்க நேரலாம். பெண்களுக்கு வீண் அலைச்சல், வேலைப் பளு ஆகியவை அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். அரசியல் துறையினருக்கு பயணங்கள் ஏற்படும். மாணவர்களுக்கு அடுத்தவரை பற்றிய விமர்சனங்கள், கிண்டல், கேலி பேச்சு போன்றவற்றை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: பயன்தராத முயற்சிகளை கைவிட்டு எந்த ஒரு வேலையையும் ஆராய்ந்து செயல்படுவது வெற்றியை தரும். மாணவர்கள் எதிர்கால நலன் கருதி எந்த காரியத்தையும் செய்வது நன்மை தரும்.

திருவோணம்: எந்த நிலையிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். நீங்கள் பிடிவாத குணத்தை தளர்த்திக் கொண்டால் எதிலும் முன்னேற்றம் காண முடியும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

அவிட்டம் 1, 2 பாதங்கள்: வெளியூர் பயணங்கள் சாதகமான பலன் தரும். தொழில் வியாபாரம் மூலம் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழில் வியாபார வளர்ச்சிக்கு தேவையான ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்தி சாதுரியத்தால் அலுவலக வேலைகளை திறமையாக செய்து முடித்து மதிப்பும் மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள்.

பரிகாரம்: விநாயக பெருமானுக்கு அருகம் புல் மாலை சாற்றி அர்ச்சனை செய்து வர குடும்ப கஷ்டங்கள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் மேன்மை உண்டாகும்.

கும்பம்: (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை- ராசியில் சனி, ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு(வ) - களத்திர ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் புதன் - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் தடைபட்ட காரியங்களில் இருந்த தடை நீங்கி நன்றாக நடந்து முடியும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிக்கல் தீரும். எதிர்த்து செயல்பட்டவர்கள் விலகி சென்று விடுவார்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். போட்டிகள் குறையும். எதிர்பார்த்த ஆர்டர் வரும். பண வரத்து திருப்தி தரும். கடன் பிரச்சனை கட்டுக்குள் இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களின் உழைப்புக்கு ஏற்ற நல்ல பலன் கிடைக்கும். மேல் அதிகாரிகள் ஒத்துழைப்பும் இருக்கும். குடும்பத்தில் உங்களுக்கு எதிராக பிரச்சனையை உண்டாக்கியவர்கள் தானாகவே அடங்கி விடுவார்கள். வீட்டில் சுப காரியம் நடக்கும். திருமண காரியங்களில் சாதகமான போக்க காணப்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். மதிப்பு கூடும்.

பெண்களுக்கு எந்த ஒரு சின்ன வேலைக்காகவும் மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். அரசியல்துறையினருக்கு பயணங்களின் போது கவனம் தேவை. மாணவர்களுக்கு சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டு படிப்பது நல்லது. வகுப்பில் கவனத்தை சிதற விடாமல் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். வீடு, வாகனங்கள் புதுப்பிக்க அல்லது புதிதாக வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதில் சாதகமான பலன் கிடைக்கும்.

சதயம்: மன குழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை மேலோங்கும். பயணங்கள் வெற்றியை தரும். மாணவர்கள் புத்திசாதூரியத்தால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். மற்றவர்களின் பாராட்டும் கிடைக்கும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: மற்றவர்களின் கட்டாயத்திற்காக எந்த காரியத்தையும் செய்ய வேண்டாம். எந்த இடத்தில் பேசும் போதும் கவனமாக பேசுவது நல்லது. வாக்குறுதிகளை கொடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும். விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம். மனம் தளராமல் இருப்பது நல்லது. வீண் ஆசைகள் தோன்றலாம்.

பரிகாரம்: வியாழக்கிழமையில் ஆஞ்சநேயரை வெண்ணெய் சாற்றி வணங்கி தீபம் ஏற்றி வர எல்லா கஷ்டங்களும் நீங்கும். பொருளாதாரம் மேம்படும் தைரியம் உண்டாகும்.

மீனம்: (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை- பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் புதன் - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - அயன சயன போக ஸ்தானத்தில் சனி, ராகு என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் தேவையற்ற மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனை வராமல் தடுக்கலாம். சிறிய விஷயத்துக்கு கூட கோபம் வரலாம். கட்டுப்படுத்துவது நன்மை தரும். திடீர் பண தேவை உண்டாகலாம். தொழில் வியாபாரம் தொடர்பான வீண் அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதில் தாமதம் ஏற்படலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகம் பற்றி யாருடனும் விமர்சனம் செய்யாமல் இருப்பது நல்லது. பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதப்படலாம். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களுக்கு டென்ஷன் தருவதாக இருக்கலாம். கணவன், மனைவிக்கு இடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தரும். பிள்ளைகளிடம் அனுசரித்து செல்வதும் அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பதும் நல்லது.

பெண்களுக்கு கோபத்தை கட்டுப்படுத்துவதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நன்மை தரும். கலைத் துறையினருக்கு வீண் செலவை தடுக்க திட்டமிட்டு செயல்படுவது நல்லது. அரசியல்துறையினருக்கு புதிய பதவிகள் வந்து சேரும். மாணவர்களுக்கு சக மாணவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். மிகவும் பொறுமையுடனும், கவனமாக வும் பாடங்களை படிப்பது அவசியம்.

பூரட்டாதி 4ம் பாதம்: தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்களை அனுசரித்து செல்வது வியாபார வளர்ச்சிக்கு உதவும். தொழில் தொடர்பான அலைச்சல் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.

உத்திரட்டாதி: குடும்ப விஷயத்தில் அந்நிய நபர்களின் தலையீட்டை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவருக் கொருவர் விட்டு கொடுத்து செல்வது மன அமைதியை தரும். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. பிள்ளைகளிடம் அன்பாக பேசுவது நன்மை தரும்.

ரேவதி: எந்த நிலையிலும் மனம் தளராது காரியங்கள் செய்வது வெற்றியை தரும். வாக்குறுதிகளை தவிர்க்கவும். மாணவர்கள் யாருக்கும் உத்திரவாதம் அளிக்காமல் இருப்பது நல்லது. கல்வியில் கூடுதல் கவனம் தேவை.

பரிகாரம்: சித்தர்களை வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

இந்த வார கிரகங்களின் நிலை

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

SCROLL FOR NEXT