ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை - ராசியில்குரு - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் -பஞ்சம ஸ்தானத்தில் கேது -தொழில் ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், சனி -லாப ஸ்தானத்தில் ராகு, சுக்கிரன், புதன் என வலம் வருகிறார்கள்.
கிரகமாற்றங்கள்: 04-03-2025 அன்று சுக்கிர பகவான் வக்ரம் ஆகிறார் | 09-03-2025 அன்று புதன் பகவான் வக்ரம் ஆகிறார் | 14-03-2025 அன்று சூரிய பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 18-03-2025 அன்று வக்ர நிலையில் இருக்கும் புதன் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 30-03-2025 அன்று புதன் வக்ர நிவர்த்தி ஆகிறார்.
பலன்கள்: சொன்ன சொல்லை காப்பாற்றும் குணமுடைய ரிஷப ராசியினரே! இந்த மாதம் தைரியமாக எதையும் செய்ய தோன்றும். உங்களது செயல்களால் உங்களுக்கு மற்றவர்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். எதிலும் தயக்கமோ, பயமோ இல்லாமல் ஈடுபடுவீர்கள். தந்தை மூலம் உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் இருக்கும். சகோதரர்களுக்குள் ஒற்றுமை குறையும்.
தொழில், வியாபாரத்தில் முழு கவனத்தையும் செலுத்துவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். அரசாங்கம் மூலமாக நடக்க வேண்டிய காரியங்களும் நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கலின்றி எதையும் செய்து முடிப்பார்கள். பணி தொடர்பான பயணங்கள் இருக்கும்.
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் மூலம் ஆதாயம் உண்டாகும். குடும்பத்துடன் புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்வீர்கள். தந்தை வழி உறவினர்களுடன் இருந்து வந்த மனக்கிலேசம் அகலும். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். உங்களது பொருட்களின் மீது கவனம் தேவை. சாதுரியமான செயல்களால் லாபம் உண்டாகும்.
பெண்களுக்கு எதிலும் தயக்கமோ, பயமோ இல்லாமல் ஈடுபட்டு சிறப்பாக செய்வீர்கள். பெரியவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு எல்லா காரியங்களிலும் அதிக கவனம் உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். தன்னம்பிக்கை ஏற்படும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி வரும்.
அரசியல்துறையினருக்கு வேலைகள் உடனே முடியாமல் இழுபறியாக இருக்கும். வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளை கேட்பதை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் தடங்கல் இன்றி நன்றாக படிப்பீர்கள். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மூலம் கல்விக்கான உதவிகள் கிடைக்கும்.
கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் எதையும் சமாளித்துவிட முடியும். ஆடம்பர செலவுகள் கூடவே கூடாது. புதிய வீடு, மனை வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று திருப்தியான மண வாழ்க்கையும் அமையும். சந்தாண பக்கியமும் கிட்டும்.
ரோகிணி: என்ன தான் பாடுபட்டாலும் திறமைகளை வெளிபடுத்த முடியாதபடி தடைகள் ஏற்படும். உங்களின் உழைப்பிற்கான பாராட்டுதல்களை பிறர் தட்டிச் செல்வார்கள். எதிர்பாராத இடமாற்றங்களால் குடும்பத்தை விட்டுப் பிரிந்து செல்ல வேண்டியிருக்கும். தேவையற்ற இட மாற்றங்களால் அலைச்சல்களும் உண்டாகும்.
மிருகசிரீஷம் 1, 2, பாதங்கள்: மேலதிகாரிகளிடம் பேசும் போது நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. அடிக்கடி உடலில் பாதிப்புகள் உண்டாவதால் விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும். வரவேண்டிய நிலுவைத் தொகைகளும் இழுபறியில் இருக்கும். வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.
பரிகாரம்: பவுர்ணமியில் மகாலட்சுமியை பூஜை செய்து வழிபட பணத்தட்டுப்பாடு நீங்கும். குழப்பங்கள் தீரும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: 22, 23 | அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16, 17
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்