தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பருவத்தேர்வுகள் நேரடி முறையில் நடத்தப்படும் என்று உயர்கல்வித் துறை கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி பொறியியல் மாணவர்களுக்கான நடப்பு பருவத்தேர்வுகள் நேரடிமுறையில் நடைபெற உள்ளன. இதற்கான தேர்வுக்கால அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இளநிலை மாணவர்களுக்கான நவம்பர் - டிசம்பர் மாத பருவத்தேர்வுகள் ஜன.21 முதல் மார்ச் 2-ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடைபெற உள்ளன.
முதுநிலை மாணவர்களுக்கு ஜன.21-ம் தேதி முதல் பிப்ரவரி மாத இறுதி வரை தேர்வு நடைபெறும். அரியர் மாணவர்களுக்கான சிறப்பு தேர்வுகளும் இதனுடன் சேர்த்து நடத்தப்படும்.
தேர்வுக் கால அட்டவணை குறித்த விவரங்களை https://www.annauniv.edu/ என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.