Regional02

அரிய மணல் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பில்லை : சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் தகவல்

செய்திப்பிரிவு

``மணவாளக்குறிச்சி இந்திய அரியமணல் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லை” என, சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழுதலைவர் எஸ்.ஆர்.ராஜா தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை கடந்த 10 ஆண்டுகளில் சரியாக பராமரிக்கப்படவில்லை. இதுகுறித்து, அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, திருவள்ளுவர் சிலையை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மணவாளக்குறிச்சி மணல் ஆலையை ஒட்டிய பகுதிகளில் சுற்றுச்சூழல் மிகவும் மோசமாக இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், அங்கு ஆய்வு மேற்கொண்டோம். ஆனால், சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லை என்பதை தெரிந்து கொண்டோம். நிலுவையிலுள்ள தணிக்கை குழுவின் அறிக்கைகளுக்கு விரைவாக தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாட்கோ நிறுவனத்தை மேலும் மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு போக்குவரத்து கழகத்தால் இழப்பீடு வழங்குவதற்காக ரூ. 15 கோடி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.3 கோடி விரைவில் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT