தாம்பரம் ஆர்டிஓ அலுவலகத்தில் ஸ்மார்ட் கார்டு பற்றாக்குறையால் லைசென்ஸ் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
ஆர்டிஓ அலுவலகங்களில் புதிய லைசென்ஸ், ஆர்.சி.புக்,உரிமை மாற்றம், பெயர் மாற்றம் போன்றவற்றுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு ஸ்மார்ட் கார்ட் மூலமாக சிப் பொருத்திய அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது தாம்பரம் ஆர்டிஒ அலுவலகத்தில் புதிய லைசென்ஸ், ஆர்.சி.புக் பெறுவதற்காக விண்ணப்பித்த பலருக்கும் தினமும் அலுவலகங்களை அணுகியும் சரியான பதில் இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் ஆர்டிஓ அலுவலகத்தில் கடந்த 15 நாட்களாக பொதுமக்களுக்கு லைசென்ஸ், ஆர்சி புக் வழங்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து அதிகாரி கூறியதாவது: வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி. புக், உரிமை மாற்றம், பெயர் மாற்றம் போன்றவற்றுக்காக விண்ணப்பித்த நபர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வடிவில் புதியஅடையாள அட்டை வழங்கப்படுகிறது. இப்படி வழங்கப்படும் அடையாள அட்டை பற்றாக்குறை காரணமாகவே தற்போது கால தாமதம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் வேலைகள் அனைத்தும் நடைபெற்றுக் கொண்டே வருகின்றன. சிப்புகள், ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் காண்ட்ராக்ட் எடுத்துள்ள தனியார்நிறுவனங்களிடம் பேசி உள்ளோம். ஓரிரு நாட்களில் இந்த பிரச்சினை தீர்வுக்கு வரும் என்றார்.