விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பிளாஸ்டிக் பைகளில் கட்டப்பட்டு பல நாட்களாக அகற்றப்படாமல் குவிந்து கிடக்கும் பிரசவ கழிவுகள். 
Regional02

விருதுநகர் அரசு மருத்துவமனையில் - கொட்டிக் கிடக்கும் கழிவுகளால் சுகாதாரக் கேடு :

இ.மணிகண்டன்

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் குவிந்து கிடக்கும் கழிவுகளால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.

விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புற நோயாளிகளாகவும், 200-க்கும் மேற்பட்டோர் உள் நோயாளி களாவும் சிகிச்சை பெறுகின்றனர்.

இந்த மருத்துவமனையில் பிரசவ வார்டுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் பிளாஸ்டிக் பைகளில் கட்டப்பட்டு மருத்துவமனை வளாகத்திலேயே பல நாட்களாக அகற்றப்படாமல் குவிந்துள்ளன. இதனால், நோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே மருத்துவக் கழிவுகளை அகற்ற நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் நடக்க முடியாத நோயா ளிகள், முதியவர்கள் வசதிக்காக ரூ.10 லட்சத்தில் இரு பேட்டரி கார்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டன. இவை பராமரிப்பின்றி ஓரம் கட்டப்பட்டுள்ளன. இந்த பேட்டரி கார்களை சரிசெய்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் சங்குமணியிடம் கேட்டபோது, நகராட்சி மூலம் இக்கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளதாகத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT