வாழப்பாடி அடுத்த புழுதிக்குட்டையில் கட்டப்பட்டுள்ள ஆனைமடுவு அணை 16 ஆண்டுகளுக்கு பின்னர் நிரம்பியது. இதையடுத்து, அணையில் இருந்து விநாடிக்கு 110 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கரியக்கோவில் அணையும் நிரம்பும் நிலையில் உள்ளது.
வாழப்பாடி அடுத்த புழுதிக்குட்டை கிராமத்தில் அருநூற்றுமலை அடிவாரத்தில் வசிஷ்ட நதியின் குறுக்கே 67.25 அடி நீர்மட்டம் கொண்ட ஆனைமடுவு அணை உள்ளது. வடகிழக்குப் பருவமழை காரணமாக அணைக்கு கடந்த சில வாரங்களாக நீர்வரத்து அதிகரித்ததால், வேகமாக நிரம்பி அணை நீர்மட்டம் 65.45 அடியை எட்டியது.
நீர்வரத்து விநாடிக்கு 110 கனஅடியாக உள்ளது. இதையடுத்து, அணையின் பாதுகாப்பை கருதி நேற்று முன்தினம் அணையில் இருந்து விநாடிக்கு 110 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கடந்த 16 ஆண்டுகளுக்குப் பின்னர் நிரம்பிய அணையில் இருந்து, வசிஷ்ட நதியில் நீர் திறக்கப்பட்டுள்ளதால், அப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வெள்ள எச்சரிக்கை
இதுதொடர்பாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் கூறும்போது, “அணை எந்நேரமும் நிரம்பும் என்பதால், வசிஷ்ட நதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என்றனர்.வாழப்பாடி அடுத்த புழுதிக்குட்டையில் உள்ள ஆனைமடுவு அணை நிரம்பியது. இதையடுத்து, அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் மதகு வழியாக சீறிப்பாய்ந்து செல்கிறது.