எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க திட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துகேட்கும் கூட்டம் ஜனவரி 6-ம் தேதி நடைபெற உள்ளது.
டான்ஜெட்கோ சார்பில் சென்னை எர்ணாவூர் பகுதியில் உள்ள எண்ணூர் அனல்மின் நிலைய வளாகத்தில் 660 மெகாவாட் திறன் கொண்ட நிலக்கரி அடிப்படையிலான அதிநவீன தொழில்நுட்பத் திறன் கொண்ட எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க திட்டம் ரூ.5,421 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையத்தில் ஆண்டுக்கு 20 லட்சம் டன் நிலக்கரி கையாளப்பட உள்ளது.
இத்திட்டத்தில் நிலக்கரி எரியும் கொதிகலன், நீராவி விசையால் இயங்கும் ஜெனரேட்டர், 275 மீட்டர் உயரம் உள்ள புகைப்போக்கி உள்ளிட்டவை நிறுவப்பட உள்ளன.
இதற்காக சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் டான்ஜெட்கோ விண்ணப்பித்துள்ளது. அதற்கான பொதுமக்கள் கருத்துகேட்புக் கூட்டம் எர்ணாவூரில் எண்ணூர் அனல்மின்நிலைய வளாகத்தில் உள்ள எஸ்எஸ்எஸ்எம் மெட்ரிக் பள்ளியில் வரும் ஜனவரி 6-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.