எழுத்தாளர் ஜோ டி குருஸின் ‘வேர் பிடித்த விளை நிலங்கள்’ ஒலி புத்தகம் வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றோர். 
Regional02

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு - பாட்காஸ்டில் ‘வேர் பிடித்த விளை நிலங்கள்’நூல் : கடல் ஓசை சமுதாய வானொலி வெளியீடு

எஸ். முஹம்மது ராஃபி

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு பாட்காஸ்டில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் ஜோ டி குருஸின் ‘வேர் பிடித்த விளை நிலங்கள்’ நூலை கடல் ஓசை சமுதாய வானொலி வெளி யிட்டது.

ஊடக வரிசையில் புதிதாக இணைந்த ஊடகம் ‘பாட்காஸ்ட்’ (Podcast). இது ஒலி வடிவிலான நிகழ்ச்சியை இணையத்தில் கேட்டு ரசிப்பதற்கான வழியாகும்.

ஆழி சூழ் உலகு, கொற்கை, அஸ்தினாபுரம் நாவல்கள் மூலம் கடலோடிகளின் வாழ்க்கையை பதிவு செய்தவர் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் ஜோ டி குருஸ். இவரது சுயசரிதை நூல் ‘வேர் பிடித்த விளை நிலங்கள்’.

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு பாம்பன் கடல் ஓசை சமுதாய வானொலி பாட்காஸ்டில் எழுத்தாளர் ஜோ டி குருஸின் ‘வேர் பிடித்த விளை நிலங்கள்’ நூலை ‘பாட்காஸ்ட்’ ஒலி புத்தகமாக வெளியிட்டது. இந்நிகழ்ச்சி ராமநாதபுரம் மாவட்டம் முத்துப் பேட்டை கௌசானல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

விழாவில் எழுத்தாளர் ஜோ டி குருஸ், நாட்டுப்படகு மீனவ சங்கத் தலைவர் ராயப்பன், பாம்பன் நேசக்கரங்கள் அறக்கட்டளையின் துணை நிறுவனர் சுபேகா பெர்னாண்டோ, மீன் வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயன், ஏஎஸ்பி தீபக் சிவாஜ், சுகாதாரத் துறை துணை இயக்குநர் குமரகுருபரன், கல்லூரி முதல்வர் ஹேமலதா, கடல் ஓசை சமுதாய வானொலியின் நிலைய இயக்குநர் காயத்ரி உஸ்மா ஆகியோர் பங்கேற்றனர். ஜோ.டி. குருஸின் ‘வேர் பிடித்த விளை நிலங்கள்’ பாட்காஸ்டிங்கை https://www.facebook.com/kadalosaifm-ல் கேட்கலாம்.

          
SCROLL FOR NEXT