ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்திய செவிலியர்கள். படம்: ஜெ.மனோகரன் 
Regional02

ஊக்க ஊதியம் வழங்க கோரி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

அரசு அறிவித்தபடி ஊக்க ஊதியம் வழங்க வலியுறுத்தி, கிராம சுகாதார செவிலியர்கள் கோவையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்ட கிராம, பகுதி சமுதாய சுகாதார செவிலியர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த செவிலி யர்கள் மாவட்ட செயலர் பா.லில்லிதலைமையில், ஆட்சியர் அலுவலகவளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து,ஆட்சியர் ஜி.எஸ்.சமீரனை சந்தித்துமனு அளித்தனர்.

அந்த மனுவில், ‘‘தமிழக அரசு அறிவித்த ஊக்க ஊதியத்தை அனைத்து செவிலியர்களுக்கும் வழங்க வேண்டும்.

வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்துவதை ரத்து செய்து, தாய், சேய் நலப் பணிகள் பாதிக்காத வகையில், வாரம் ஒருநாள் அதுவும் வேலை நாட்களில் நடக்கும் முகாமில் மட்டும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா தடுப்பூசி பணிக்கு இலக்குநிர்ணயிப்பதை கைவிட வேண்டும்.சமுதாய சுகாதார செவிலியர்களுக் காக, கடந்த 2016-ம் ஆண்டு தமிழக அரசு ஏற்றுக் கொண்டபடி, 50-க்கு 50 என்ற விகிதத்தின் அடிப்படையில் தாய் சேய் நல அலுவலர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.

சுகாதார ஆய்வாளர்களுக்கு 1995-ல் நிலை-1 தகுதி வழங்கியதைப் போல, 1.1.1996 முதல் முன்தேதியிட்டு கிராம சுகாதார செவிலியர்களுக்கும் வழங்க வேண்டும். துணை சுகாதார நிலையங்களில் செவிலியர் நியமனம் கருத்துருவை கைவிட வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கிராம சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பாலாமணி தலைமை வகித்தார். தமிழ்நாடு பொது நூலக அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் பாலராஜசேகர் வாழ்த்தி பேசினார். பின்னர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

SCROLL FOR NEXT