ஏரல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளை சிறுத் தொண்டநல்லூர் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பேருந்தை ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். 
Regional02

ஏரல் பள்ளி மாணவிகள் - சிறுத்தொண்டநல்லூர் பள்ளிக்கு மாற்றம் :

செய்திப்பிரிவு

ஏரல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 645 மாணவிகள் படிக்கின்றனர். இந்த பள்ளியில் வகுப்பறை கட்டிடங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளன. மழை பெய்து வருவதால் அந்த கட்டிடங்களை பயன்படுத்துவதில் ஆபத்து நிலவியது. எனவே, இந்த பள்ளியின் அனைத்து வகுப்புகளையும் அருகேயுள்ள சிறுத்தொண்டநல்லூர் அரசு முத்துமாலையம்மன் மேல்நிலைப் பள்ளிக்கு மாற்ற கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

அதன்படி நேற்று 6, 10, 11, 12 ஆகிய 4 வகுப்புகளின் மாணவிகள் 3 அரசு பேருந்துகளில் சிறுத்தொண்டநல்லூர் அரசு முத்துமாலையம்மன் மேல்நிலைப்பள்ளிக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். அந்த பள்ளியில் உள்ள தனிகட்டிடத்தில் ஏரல் பள்ளி மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டன.

மாணவிகளை அழைத்துச்சென்ற பேருந்துகளை ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் எம்எல்ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும், சிறுத்தொண்டநல்லூர் சென்று, அங்குள்ள பள்ளியில் மாணவிகளுக்கு வகுப்பறையில் உள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.

நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, தலைமை ஆசிரியை ஞானசெல்வி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வின்சென்ட் வெள்ளையா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT