நவம்பர் மாதத்துக்கான நூல் விலை அனைத்து ரகங்களுக்கும் ரூ. 50 அதிரடியாக உயர்த்தப்பட்டதால், தொழில் துறையினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தொடர் பண்டிகையால் திருப்பூர் உள்நாட்டுக்கான பின்னலாடை தயாரிப்பு நிறுவனங்களுக்கு வெளிமாநிலங்களில் இருந்தும், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்தும் ஆர்டர்கள் அதிகளவில் வந்து கொண்டிருக்கின்றன.
நூற்பாலைகளை பொறுத்தவரை பஞ்சு விலையை அடிப்படையாகக் கொண்டு மாதம்தோறும் 1-ம் தேதி நூல் விலையை நிர்ணயிக்கின்றன. கடந்த 2020 நவம்பர் முதல் 2021 ஏப்ரல் வரை தமிழக நூற்பாலைகள் ஒசைரி நூல் விலையை உயர்த்தின. இருப்பினும், கடந்த சில மாதங்களாக நூற்பாலைகள் நூல் விலையை ஒரே சீராக தொடர்கின்றன. இந்நிலையில் நடப்பு மாதத்தில் அனைத்து ரக நூல்களுக்கும் ரூ.50 உயர்த்தப்பட்டிருப்பது தொழில்துறையினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
வரலாறு காணாத விலையேற்றம்
நூல் விலை விவரம் (கிலோவுக்கு): 20-ம் நம்பர் கோம்டு ரக நுால் (வரி நீங்கலாக) ரூ. 305, 24-ம் நம்பர் ரூ. 315, 30-ம் நம்பர் நுால் ரூ. 325, 34-ம் நம்பர் ரூ. 345, 40-ம் நம்பர் ரூ. 365, 20-ம் நம்பர் செமிகோம்டு ரக நுால் ரூ. 295, 24-ம் நம்பர் ரூ. 305, 30-ம் நம்பர் ரூ.315, 34-ம் நம்பர் ரூ. 335, 40-ம் நம்பர் ரூ. 355 ஆகும்.