ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு வந்த மாணவியருக்கு, வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி இனிப்பு வழங்கி வரவேற்றார். அருகில் மாவட்ட ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி. 
Regional03

ஈரோட்டில் 73 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி நிறைவு : அமைச்சர் முத்துசாமி தகவல்

செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டத்தில் 73 சதவீதம் பேர் முதல் தவணை கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர், என வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டத்தில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின் படி, ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வந்த மாணவியருக்கு, வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி இனிப்பு மற்றும் பென்சில் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கி வரவேற்றார்.

இதனைத் தொடர்ந்து வகுப்பறைகளைப் பார்வையிட்ட அமைச்சர் முத்துசாமி, மாணவியருடன் கலந்துரையாடினார். மாவட்ட ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் மலைப் பகுதியில் வசிக்கும் மாணவர்கள் இணையவழி கல்வி கற்க வசதியாக, தனியார் பங்களிப்புடன் செல்போன் டவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 73 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 30 சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். கரோனாவைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து தீவிரமாக நடந்து வருகின்றன, என்றார்.

SCROLL FOR NEXT