Regional02

பண்ணை குட்டை பணிகளை முடிக்க உத்தரவு :

செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் 646 பண்ணைக் குட்டை பணிகளை வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக முடிக்க வேண்டும் என ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை தொடர்பான ஆய்வுக்கூட்டம் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா பேசும்போது, ‘‘மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 646 விவசாயிகளுக்கு பண்ணைக் குட்டை அமைக்க ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பணிகளை வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே முடிக்க வேண்டும். நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க வேண்டும்.

ஊரகப் பகுதிகளில் பழுதான சாலைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள 208 ஊராட்சி பகுதிகளிலும் குடிநீர் தங்குதடையின்றி வழங்க வேண்டும். மாவட்டத்தில் தூய்மை பாரதம் இயக்கத்தின் சார்பில் தூய்மை கணக்கெடுப்பு பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும்’’ என தெரிவித்தார்.

இதில், மாவட்ட ஊரக வளர்ச்சிமுகமை திட்ட இயக்குநர் செல்வராசு, உதவி இயக்குநர் (தணிக்கை) பிச்சாண்டி, செயற்பொறியாளர் சுந்தரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT