விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசியதாவது:
2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக தேசிய அளவில் அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைக்க வேண்டும். பாஜகவுக்கு மீண்டும் ஆட்சி அதிகாரம் வழங்கும் சூழலைத் தடுக்க வேண்டும். இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய வகையில் ஆணவக்கொலை தடுப்புச் சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும்.
தமிழகத்தில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த, குற்றப் பின்னணி உடையவர்களை காவல்துறையினர் கைது செய்வது வரவேற்கத்தக்கது. ஆனால், அதேசமயம் என்கவுன்ட்டர் கூடாது என்பதுதான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு.
இதை ஒருபோதும் எங்கள் கட்சி ஏற்காது. எத்தனை கொலை வழக்கில் ஈடுபட்டிருந்தாலும், சட்டப்பூர்வமாக விசாரித்து அவர்களுக்கு சட்டப்படியே தண்டனை பெற்றுத்தர வேண்டும். தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கை கொண்டு வரப்பட வேண்டும் என்றார்.