புதுவை உள்ளாட்சித் தேர்தலில் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம்.இதுதொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வருகிறோம். உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் சட்டச் சிக்கலை தீர்க்க முயற்சித்து வருகிறோம் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
புதுவை கோரிமேடு ஞானதியாகு நகரில் உள்ள சமுதாயநலக்கூடத்தில் கரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இந்த முகாமை ஆளுநர் தமிழிசை பார்வையிட வந்தார். தொகுதி எம்எல்ஏ ஏகேடி.ஆறுமுகம் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அங்கு தடுப்பூசி போடும் பணியை பார்வையிட்ட ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கரோனா பரவாமல் இருக்க காரணம் தடுப்பூசிதான். கரோனாதானாக நிற்கவில்லை. தடுப்புநடவடிக்கைகளால் நின்றிருக்கிறது. தடுப்பூசி போடாத ஒருவரால் கரோனா பரவினால் அது குற்றம்.புதுச்சேரியில் ஏறக்குறைய 80 சதவீதம் பேர் முதல் தவணையையும், 35 சதவீதம் பேர் இரண்டாம் தவணையையும் போட்டுள்ளனர். மொத்தம் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை 18 நாடுகள் பயன்படுத்துகின்றன. 2 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசியை நம்நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நம்நாட்டு விஞ்ஞானிகளுக்கு என் பாராட்டுகள். விஞ்ஞானத்தில் நாம் புரட்சி செய்து வருகிறோம்.
புதுவையில் அடிப்படை கட்டமைப்பு சரிசெய்ய வேண்டியுள்ளது. இதற்கான கோப்புகளுக்கு அனுமதி உடனடியாக வழங்கப்படுகிறது. பாதாள சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் நகரத்தைமேம்படுத்த வடிகால் அமைக்கும்திட்டம் உள்ளது. பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. இதில் உள்ள சட்டச் சிக்கல்களை கருத்தில் கொள்ள வேண்டும்.
உச்ச நீதிமன்றம் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தவேண்டும் என கெடு விதித்தது. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு இன்றி தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. புதுவையில் இடஒதுக்கீடு அளிக்கபட்டியல், வார்டுகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதற்கு போதிய கால அவகாசம் இல்லாததால் சட்டச் சிக்கலுக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எம்எல்ஏக்கள் அனைவரும் இடஒதுக்கீடு கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வருகிறோம்.உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் சட்டச் சிக்கலை தீர்க்க முயற்சித்து வருகிறோம். நல்ல தீர்ப்பு வரும்என காத்திருக்கிறோம். இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு. மாநில தேர்தல் ஆணையரை மாற்ற அரசியல் கட்சியினர் கோரியுள்ளனர். சட்ட விதிமுறைக்கு உட்பட்டுத்தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று தெரிவித்தார்.