திருப்பத்தூர் அரசு மருத்துவமனையை சூழ்ந்துள்ள தண்ணீர். 
Regional02

அரசு மருத்துவமனையை சூழ்ந்த மழைநீர் : திருப்பத்தூரில் தொற்றுநோய் பரவும் அபாயம்

செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் வெளியேற வழியின்றி குளம்போல் தேங்கி உள்ளது.

திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு தினமும் 300-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். உள்நோயாளிகளாக 30-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இம்மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் வெளியேற போதிய வடிகால் வசதி இல்லை.

இந்நிலையில், திருப்பத்தூர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மருத்துவமனை வளாகம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. மேலும் கொசுத் தொல்லை அதிகமாக உள்ளது.

தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து நோயாளிகள் சிலர் கூறுகையில், ‘‘திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு திருப்பத்தூர் மட்டுமின்றி கோட்டையிருப்பு, சுண்ணாம்பிருப்பு, கருப்பூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்தும் அதிகளவில் நோயாளிகள் வருகின்றனர்.

ஆனால், மருத்துவமனையில் போதிய வசதி இல்லை. இதனால் சிறிய காயம் என்றாலும், சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்புகின்றனர். தற்போது மருத்துவமனையைச் சுற்றிலும் தண்ணீர் தேங்கி உள்ளதால் கொசுத் தொல்லையோடு, அதிகமான பாம்புகளும் சுற்றித் திரிகின்றன என்றனர்.

SCROLL FOR NEXT