கோவை: தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் சார்பில், கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி, சேலம், பர்கூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள அரசினர் பொறியியல் கல்லூரிகள், காரைக்குடி அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, வேலூர் தந்தை பெரியார் அரசினர் பொறியியல் கல்லூரி, கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி, சிஐடி கல்லூரி, மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் பகுதி நேர பி.இ மற்றும் பி.டெக் பட்டப்படிப்புகள் உள்ளன.
இக்கல்லூரிகளில் நடப்பாண்டு பகுதி நேர பி.இ, பி.டெக் பட்டப்படிப்புகளில் சேர மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதற்கான தரவரிசைப் பட்டியல் நேற்று ஆன்லைனில் வெளியிடப்பட்டது.
இதுதொடர்பாக, மாணவர் சேர்க்கை ஒருங்கிணைப்பாளர் எஸ்.இளங்கோ கூறும்போது,‘‘ பகுதி நேர பி.இ, பி.டெக் முதலாமாண்டு படிப்புக்கு மொத்தம் 1,011 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 516 பேர் தேர்வு செய்யப்பட்டு தரவரிசைப் பட்டியல் www.ptbe-tnea.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வரும் 8-ம் தேதிக்குள் கலந்தாய்வுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். பொதுப்பிரிவினர் ரூ.5,300 தொகையையும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் ரூ.1,100 தொகையையும் செலுத்த வேண்டும். இந்தக் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இணைய வழியிலேயே நடைபெறும். ஆசிரியர்கள் மற்றும் சிறப்புப் பிரிவினருக்கு வரும் 8-ம் தேதியும், பொதுப் பிரிவினருக்கு வரும் 11-ம் தேதி மற்றும் 12-ம் தேதியும் கலந்தாய்வு நடைபெறும்’’ என்றார்.