தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனப்பகுதியில் இயந்திரங்கள் மூலம் நெல் அறுவடை செய்யப்படுவதை வேளாண் இணை இயக்குநர் எஸ்.சின்னசாமி பார்வையிட்டார். 
Regional04

தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனப்பகுதியில் - 900 ஹெக்டரில் நெல் அறுவடைப் பணிகள் நிறைவு : வேளாண் இணை இயக்குநர் தகவல்

செய்திப்பிரிவு

தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனப் பகுதியில், இதுவரை 900 ஹெக்டரில் நெல் அறுவடைப் பணிகள் முடிந்துள்ளதாக வேளாண் இணை இயக்குநர் எஸ்.சின்னசாமி தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் கோபி, தூக்கநாயக்கன்பாளையம் வட்டாரங்களில், 5200 ஹெக்டர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டது. இப்பகுதிகளில் தற்போது, இயந்திரங்கள் வாயிலாக நெல் அறுவடைப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோபி கள்ளிப்பட்டியைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவரது வயலில் அறுவடைப் பணியினை, ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குநர் எஸ்.சின்னசாமி பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:

தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனப்பகுதியில், இந்த ஆண்டு ஏஎஸ்டி 16, டிபிஎஸ் 5, சம்பா சப் (1), என்.எல்.ஆர் (2), பிபிடி 5204 ஆகிய ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டன. இந்த ஆண்டு பூச்சி நோய் தாக்குதல் இல்லாமல், 2750 முதல் 3100 கிலோ வரை மகசூல் கிடைத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அறுவடை செய்யப்பட்ட நெல், அரசின் 33 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 40-க்கும் மேற்பட்ட நெல் அறுவடை இயந்திரங்கள் மூலம், 900 ஹெக்டேரில் அறுவடைப் பணிகள் முடிந்துள்ளது, என்றார்.

ஆய்வின்போது, வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) அ.நே.ஆசைத்தம்பி, கோபி வேளாண் உதவி இயக்குநர் ஜீவதயாளன் ஆகியோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT