திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற லோக் அதாலத்தில் வழக்கு ஒன்றுக்கு தீர்வு காணப்பட்டு, அதற்கான உத்தரவை பயனாளிகளுக்கு வழங்குகிறார் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஏ. நசீர் அகமது. படம்: மு. லெட்சுமி அருண் 
Regional01

லோக் அதாலத்: 4,840 வழக்குகளுக்கு தீர்வு :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி உட்பட 9 தாலுகாக்களில் சட்டப்பணிகள் ஆணை குழுக்களால் 16 அமர்வுகளாக லோக் அதாலத் நடைபெற்றது. மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான ஏ. நசீர் அகமது தொடங்கி வைத்தார். நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி எஸ். சமீனா, 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி ஏ. தீபா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் எம். அமிர்தவேலு, மோட்டார் வாகன விபத்து இழப்பீடு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளருமான ஏ. பிஸ்மிதா, 1-வது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சுப்பையா, நீதித்துறை நடுவர் அருண்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

லோக் அதாலத்தில் நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்பநல வழக்குகள், உரிமையியல் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், சமரசமாக முடிக்க கூடிய குற்ற வழக்குகள் உட்பட மொத்தம் 6,664 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதில் 4662 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.12.96 கோடி வழங்க உத்தரவிடப்பட்டது. மேலும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வங்கி கடன் வழக்குகள் 178-க்கு தீர்வு காணப்பட்டு ரூ.1.06 கோடி சமரச தொகைக்கு முடிக்கப்பட்டது. மொத்தமாக 4,840 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.14.02 கோடி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT