TNadu

சட்டப்பூர்வ உரிமைகளைப் பாதுகாக்க தன்னாட்சி அதிகாரத்துடன் - தமிழ்நாடு எஸ்சி-எஸ்டி நல ஆணையம் உருவாக்கப்படும் : சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சட்டப்பேரவையில் நேற்று 110-விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு:

திமுக ஆட்சி எப்போது அமைகிறதோ, அப்போதெல்லாம் ஒடுக்கப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்களுக்காக பாடுபடுகிறது.சமூகத்தில் சதிகளாலும், சாதிகளாலும் புறக்கணிப்பட்டவர்களை அன்புக்கரம் கொண்டு அரவணைத்து, அவர்களிடம் தேங்கியுள்ள திறமைகளையும், அவர்கள் மூலம் சமூகம் பெறத்தக்க பங்களிப்புகளையும் வெளிக்கொண்டு வருவதில் அதிக அக்கறையை எப்போதும் காட்டிவருவது திமுக தான்.

வன்கொடுமை தடுப்புச்சட்டப் படி முதல்வர் தலைமையில் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண் காணிப்புக் குழுக் கூட்டம் 6 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும். இதில் முன்பெல்லாம் ஆளுங்கட்சி மக்கள் பிரதிநிதிகள், ஆதரவுக்கட்சி மக்கள் பிரதிநிதிகள் மட்டுமே அழைத்து நடத்தப்பட்ட கூட்டம் போலின்றி, அனைத்து இயக்கங்களையும் சார்ந்த நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினர்களாக அமைத்து, 50-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய அரசாணை வெளியிடப்பட்டது. அவர்களை அழைத்து ஆகஸ்ட் 19-ம் தேதி கூட்டம் நடத்தப்பட்டது.

அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் அடிப்படையில் அவற்றில் சிலவற்றை செயல்படுத்த எண்ணுகிறேன்.

 மாநில அளவில் ஆதிராவிடர் கள், பழங்குடியினரின் சட்டப்பூர்வ உரிமைகளைப் பாதுகாக்கவும் அவர்களின் முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் ‘தமிழ்நாடு ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நல ஆணையம்’ என்கிற புதிய அமைப்பை தன்னாட்சி அதிகாரத்துடன் உருவாக்க அரசு சட்டம் இயற்றும். இதற்கான சட்ட முன்வடிவு வரைவு இந்தக்கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்யப்படும்.

 ஆதிதிராவிட நலத்துறையின்கீழ் இயங்கும் பள்ளிகளைப் பொதுநீரோட்டத்துக்கு கொண்டுவர வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில், முதற்கட்டமாக அப்பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள், அறிவுத்திறன் வகுப்பு, கணினிப் பயிற்சி போன்றவை பள்ளிக் கல்வித் துறையின் வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்படும். ஆனால், பள்ளிகளின் நிர்வாகம் தொடர்ந்து பழங்குடியினர் நலத்துறை வசமே இருக்கும். காலிப் பணியிடங்களை நிரப்புதல், பணி அமைப்பை நிர்வகித்தல், நிர்வாகப் பணிகளைக் கையாளுதல் போன்றவற்றை அத்துறையே செயல்படுத்தும். பள்ளிக் கல்வித் துறை அவற்றில் தலையிடாது.

 வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் பதியப்பட்டுள்ள வழக்குகளை விரைவாக இறுதி செய்ய தற்போது தமிழகத்தில் 18 சிறப்பு நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. மேலும் 4 புதிய நீதிமன்றங்கள் அமைக்கஆணைகள் வழங்கப்பட்டுள் ளன. மேலும், ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற மாநில அளவிலான விழிப்புணர்வுக் கூட்டத்தை தொடர்ந்து இன்னும் 4 புதிய நீதிமன்றங்களை சேலம், கிருஷ்ணகிரி, மதுரை, திருநெல்வேலி என வழக்குகள் அதிகம் நிலுவையில் உள்ள மாவட்டங்களில் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுரையிலும், திருநெல்வேலி யிலும் சிறப்பு நீதிமன்றங்கள் இருந்தாலும், 4 மாவட்டங்களில் அதிகளவில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.

 வன்கொடுமையால் பாதிக் கப்பட்டவர்களை சமுதாயக் கண்ணோட்டத்துடன் அணுகி, முறையான நிவாரணம், வளமான எதிர்காலத்துக்கான உத்தரவாதம் ஆகியவற்றை வழங்கத் தேவையான விழிப்புணர்வுப் பயிற்சிகள் ‘சமத்துவம் காண்போம்’ என்கிற தலைப்பில் காவல், வருவாய்த் துறைஅலுவலர்களுக்கு நடத்தப்படும்.

 தமிழகத்தில் பல கிராமங்களில் சாதி வேறுபாடுகளற்ற மயானங்கள் பயன்பாட்டில் உள்ளன. இறுதிப் பயணத்திலும் பிரிவினைகள் இருக்கக் கூடாது என்பதில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் இந்த ஊர்களுக்கு ஊக்கத் தொகையாக அரசு சார்பில் ரூ.10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படும்.

 வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழக்கின் தன்மைக்கேற்ப, ரூ. 85 ஆயிரத்தில் இருந்து ரூ. 8.25 லட்சம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இனி, இத்தொகை பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1 லட்சம், அதிகபட்சம் ரூ.12 லட்சம் என மாநில அரசுமூலம் நிதி உயர்த்தி வழங்கப் படும்.

 விழிப்புணர்வுக் கூட்டமே தேவையில்லை என்ற நிலையை அடைவதே நம் இலக்கு. தமிழகமக்களின் மனதில் மடைமாற் றத்தை ஏற்படுத்தி, அனைவரும் இணைந்து வாழ, ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்.

SCROLL FOR NEXT