சேலம் மாமாங்கம் அருகே மேக்னசைட் சுரங்கம் இயங்கி வந்தது. இங்கு செயில் கம்பெனிக்கு மூலப் பொருளான வெள்ளைக்கல் வெட்டி எடுக்கப்பட்டு வந்தது. கடந்த 2017-ம் ஆண்டு சுற்றுச்சூழல் விதிகளை மீறி இயங்கி வந்ததால் சுரங்கம் மூடப்பட்டது.
மேலும், சுரங்கத்துக்கு ரூ.45 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதனால், அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் பலர் வேலையிழந்தனர். இந்நிலையில், அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.45 கோடி அபராதத் தொகையை செலுத்தி மேக்னசைட் சுரங்கத்தை தொடங்கி தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று சேலம் - பெங்களூரு பை-பாஸ் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து அங்கு சென்ற மாநகர காவல் உதவி ஆணையர் நாகராஜ் தலைமையிலான போலீஸார், மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து, தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.