தாரமங்கலம் மற்றும் இடங்கணசாலை பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்துவது தொடர்பாக தாரமங்கலத்தில் நாளை (7-ம் தேதி) விளக்கக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக சட்டப்பேரவையில், கடந்த 24-ம் தேதி நடைபெற்ற நகராட்சி நிர்வாகத் துறை மானியக் கோரிக்கையின்போது, சேலம் மாவட்டத்தில் தாரமங்கலம் மற்றும் இடங்கணசாலை பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதன் தொடர் நடவடிக்கையாக, தாரமங்கலம் பேரூராட்சி மற்றும் இடங்கணசாலை பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்துவது தொடர்பான விளக்கக் கூட்டம் தாரமங்கலம் பேரூராட்சி சார்பாக தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நாளை (7-ம் தேதி) நண்பகல் 12 மணிக்கும், அதனைத் தொடர்ந்து பிற்பகல் 2 மணிக்கு இடங்கணசாலை பேரூராட்சி தொடர்பாகவும் விளக்கக் கூட்டம் நடைபெறவுள்ளது.
எனவே, இக்கூட்டங்களில் பேரூராட்சி, ஊராட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் உறுப்பினர்கள், பேரூராட்சி, ஊராட்சியின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பொறுப்பாளர்கள் , பொதுமக்கள், தன்னார்வலர்கள் மற்றும் குடியிருப்பு சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.