Regional01

பணி நிரந்தரம் செய்ய அண்ணா பல்கலை. ஆசிரியரல்லாத பணியாளர்கள் கோரிக்கை :

செய்திப்பிரிவு

அண்ணா பல்கலைக்கழக தொழில்நுட்ப மற்றும் அனைத்து பணியாளர்கள் நலச்சங்க திருச்சி வளாக ஒருங்கிணைப்பாளர் எஸ்.கயல்விழி உள்ளிட்டோர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:

சென்னையில் மட்டும் இயங்கி வந்த அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 2007-ல் திமுக ஆட்சியின்போது நிர்வாக வசதிக்காக மாநிலத்தின் 5 இடங்களில் அண்ணா பல்கலைக்கழகங்களாகவும், 12 இடங்களில் உறுப்புக் கல்லூரிகளாகவும் மாற்றப்பட்டது. அப்போது எழுத்து, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் ஆசிரியரல்லாத பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

அதன்படி, தமிழகம் முழுவதும் 711 பேர் கடந்த 14 ஆண்டுகளாக தற்காலிகமாக பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு 6 மாதத்துக்கு ஒருமுறை தகுதி திறனாய்வு தேர்வு நடத்தி பணி நீட்டிப்பு செய்யப்பட்டு வருகிறது. அதன்பின் 2012-ல் 5 பல்கலைக்கழகங்களும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு, தற்போது 4 மண்டல அலுவலகங்களாக செயல்படுகின்றன. கடந்த அதிமுக ஆட்சியில் ஊதிய உயர்வு, பணி வரன்முறை செய்யக் கோரியும் பலனில்லை.

அரசுத் துறை நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் தற்காலிகமாக பணிபுரியும் அனைவரும் நிரந்தம் செய்யப்படுவர் என திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, 14 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

SCROLL FOR NEXT