மழைக்கால நிவாரணமாக ரூ.5,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்ததைத் தொடர்ந்து தூத்துக்குடி ராஜபாண்டி நகர் உப்பள பகுதியில் உப்பளத் தொழிலாளர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். படம்: என்.ராஜேஷ் 
Regional02

மழைக்கால நிவாரணம் ரூ.5 ஆயிரம் அறிவிப்பு - உப்பளத் தொழிலாளர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சி :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பளத் தொழிலில் சுமார் 25 ஆயிரம் பேர்நேரடியாக ஈடுபட்டுள்ளனர். ஆண்டுதோறும் 6 மாதங்கள் மட்டுமே இந்த தொழில் நடைபெறும். மழைக் காலங்களில் உப்பளத் தொழில் அடியோடு நிறுத்தப்பட்டுவிடும். இதனால் உப்பளத் தொழிலாளர்கள் 6 மாதங்கள் வேலை இல்லாமல் இருக்கும் நிலை உள்ளது. எனவே,மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்பது அவர்களது நீண்ட கால கோரிக்கை. கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்கப்படும் என, திமுக வாக்குறுதி அளித்தது. அந்த வாக்குறுதி தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் தொழில் துறை மானிய கோரிக்கைமீதான விவாதத்துக்கு நேற்றுமுன்தினம் பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ஆண்டுக்கு ரூ.5,000 வழங்கப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பால் தூத்துக்குடி மாவட்ட உப்பளத்தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நேற்று பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ந்தனர். அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு, சிஐடியு உப்புத் தொழிலாளர் சங்கம் சார்பில் இனிப்பு வழங்கப்பட்டது.

அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மா.கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, “ மழைக்கால நிவாரணமாக ரூ.5,000 வழங்க ஆவண செய்த தமிழக அரசுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி.,அமைச்சர் கீதாஜீவன் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். இந்த உதவித் தொகை நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி, உப்பளங்களில் பணி செய்கின்ற அனைத்து தொழிலாளர்களுக்கும் முழுமையாக கிடைக்க வேண்டும். உப்பளங்களில் குடிநீர், கழிப்பறை, குழந்தை காப்பகம், நடமாடும் மருத்துவ வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும். உப்பளத் தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும்” என்றார்.

SCROLL FOR NEXT