தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம்உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசால் 60 சதவீதம் மானியத்துடன் சோலார்பம்ப் அமைக்க விருப்ப விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற மின்வாரியத்தால் வழங்கப்பட்ட இலவசமின் இணைப்பு இருக்க வேண்டும். இத்துடன் சூரிய ஒளி மின்சாரத்தையும் பயன்படுத்துவதால் மின்சாரம் சிக்கனமாகிறது.
மின் இணைப்பு எந்த வகையிலும் துண்டிக்கப்பட மாட்டாது. மேலும், இலவச மின்சாரமும் ரத்துசெய்யப்பட மாட்டாது. இத்திட்டத்தின்கீழ் 7.5 எச்பி வரை திறன்கொண்ட விவசாய பம்ப்புகள் மூலம் நாளொன்றுக்கு 55 யூனிட்வரை உற்பத்தி செய்யலாம். சூரியஒளி மின்சாரத்தை உபயோகப்படுத்தியது போக மீதமுள்ள மின்சாரத்தை தமிழ்நாடு மின்சார வாரிய மின் கட்டமைப்புக்கு விற்பனை செய்யவும் வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். அதன்மூலம் ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் வரை வருமானம் பெறலாம்.
மேலும், விவசாயிகள் தங்கள் நிலத்தில் 1,100 சதுர அடி நிலத்தை ஒதுக்கீடு செய்து, அந்த இடத்தில் சூரியஒளித் தகடுகளை அமைக்க வேண்டும். அதற்கான மொத்த திட்ட செலவினம் ரூ.5 லட்சம் ஆகும். இதில் 60 சதவீதமான ரூ.3 லடசத்தை மத்திய, மாநிலஅரசுகளின் மானியமாக பெறலாம். மீதமுள்ள ரூ.2 லட்சம் விவசாயிகளின் பங்களிப்புத் தொகையாகும். இத்தொகையை முன்னோடி வங்கியின் மூலம் குறைந்த வட்டியில் விவசாயக் கடனாகவும் பெற அரசு ஏற்பாடு செய்யும்.
இத்திட்டத்தில் பயனடைய விரும்புவோர் விருப்ப விண்ணப்ப படிவத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்டஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் வழங்கி பயன்பெறலாம். மேலும், 9385290540 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் இணைப்பு எந்த வகையிலும் துண்டிக்கப்பட மாட்டாது. மேலும், இலவச மின்சாரமும் ரத்துசெய்யப்பட மாட்டாது.