தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ‘மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தை டீன் டி.நேரு தொடங்கி வைத்தார். படம்: என்.ராஜேஷ் 
Regional02

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் - மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ‘மக்களைத் தேடி மருத்துவம்' திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.

மருத்துவமனை டீன் டி.நேரு திட்டத்தை தொடங்கி வைத்தார். உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, மருத்துவ கண்காணிப்பாளர் பாவலன், துணைக் கண்காணிப்பாளர் குமரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

டீன் நேரு கூறும்போது, “தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரிக்கு வரக்கூடிய தொற்றா நோயாளிகள், அதாவது சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு , மார்பகப்புற்றுநோய், கர்ப்பப்பை வாய்புற்றுநோய், அதிக எடை உடையவர்கள் மற்றும் சுவாச குழாய் புற்றுநோய் உள்ளவர்களுக்கு குறியீட்டு எண் கொடுக்கப்படும்.

அந்த எண் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். அவர்கள் மூலமாக ஆரம்பசுகாதார நிலையத்தில் உள்ள மருத்துவர்கள் மற்றும் சுகாதார செவிலியர்கள் இந்த நோயாளிகளை தொடர்ந்து கண்காணித்து, அவர்கள் தொடர் சிகிச்சை செய்து வருகிறார்களா, மாத்திரை உட்கொள்கிறார்களா என்பதை கவனித்து அவர்களுடைய உடல்நலம் மேம்பட்டு, நோயிலிருந்து விடுபட உறுதுணையாக இருப்பார்கள். மேல்சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில் அவர்களை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பார்கள்” என்றார் அவர்.

SCROLL FOR NEXT