நீலகிரி மாவட்டத்தில் 32 நடமாடும்ரேஷன் கடைகள் மூலம் 4,059குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுகின்றனர் என வனத்துறை அமைச்சர் கா.கராமச்சந்திரன் தெரிவித்தார்.
உதகை அரசு விருந்தினர் மாளிகையில் கூட்டுறவுதுறை சார்பில், காவிலோரை, பட்டக்கொரை கிராமங்களுக்கு நடமாடும் ரேஷன் கடையை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேற்று தொடங்கி வைத்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் காவிலோரை ரேஷன்கடை, காவிலோரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தால் நடத்தப்பட்டு வருகிறது.
இக்கடையில் 360 குடும்பஅட்டைகள் இணைக்கப்பட்டுள் ளன. மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒடயரட்டி, பட்டக்கொரை, ஒடையட்டி, கக்கேரி, போகநட்டி ஆகிய குக்கிராமங்களைச் சேர்ந்த 175 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் 32-வதுநடமாடும் ரேஷன் கடை திறக்கப்பட்டுள்ளது.
இந்த நடமாடும் ரேஷன்கடை மாதத்தில் முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளில் செயல்படும். நீலகிரி மாவட்டத்தில்செயல்பட்டுவரும் 32 நடமாடும் ரேஷன் கடைகள் மூலம் 4,059குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுகின்றனர்.
இழப்பீடு உயர்த்தப்படும்
தமிழகத்தின் வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்தும் வகையில்,ஆண்டுக்கு ரூ.5 கோடி மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. வன விலங்குகளின் தாக்குதலால் ஏற்படும் உயிரிழப்புக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, உதகை சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.கணேஷ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன் உட்பட பலர் உடனிருந்தனர்.