சுதந்திர தினத்தை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக சேலம் ஆட்சியர் அலுவலக வளாகம் ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு வரும் ரயில்கள் உள்ளிட்ட இடங்களில் நேற்று போலீஸார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் 75-வது சுதந்திர தினவிழா இன்று (15-ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கடந்த சில நாட்களாக போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாநகர காவல்துறையினர் வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்புப் பிரிவு போலீஸார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இதேபோல, சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு வந்த பார்சல்கள், பயணிகள் வைத்திருந்த உடைமைகள் ஆகியவற்றை, வெடிகுண்டு கண்டறியும் மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை நடத்தினர். மேலும், சேலத்தில் நின்று செல்லும் அனைத்து ரயில்களிலும் போலீஸார் சோதனை நடத்தினர்.
மேலும், மாவட்டம் முழுவதும் முக்கிய வழிபாட்டுத் தலங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் உள்ளிட்ட பல இடங்களில் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.