கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருடாந்திர கடன் திட்ட அறிக்கையை ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி வெளியிட்டார். 
Regional02

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வங்கிக்கடன் ரூ.7,936 கோடி இலக்கு :

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2021-22-ம் ஆண்டிற்கான வங்கிக் கடன் இலக்கு ரூ.7,936 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி 2021-22-ம் ஆண்டிற்கான வருடாந்திர கடன் திட்டத்தின் முதல் நகலினை இந்தியன் வங்கி மண்டல மேலாளர் பழனியிடம் வழங்கினார். இதுதொடர்பாக ஆட்சியர் கூறுகையில், மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் வங்கி சார்பில் தயாரிக்கப்பட்ட 2021-22-ம் ஆண்டிற்கான கடன் திட்டத்தில் ரூ.7,936 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், ரூ.4,609 கோடி விவசாயத்திற்கும், ரூ.1,083 கோடி சிறு, குறு தொழில் முனைவோர்களுக்கும், ரூ.1,344 கோடி வீட்டு வசதி, கல்வி மற்றும் இதர முன்னுரிமை கடன்களுக்கும், ரூ.900 கோடி இதர கடன்களுக்கும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, என்றார்.

இந்நிகழ்ச்சியில், மகளிர் திட்டத்தின் திட்ட இயக்குநர் ஈஸ்வரன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்ன பாலமுருகன், மாவட்ட பொது மேலாளர் (தாட்கோ) யுவராஜ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மகேந்திரன், நபார்டு உதவி பொது மேலாளர் ஜெயபிரகாஷ், இந்தியன் வங்கி மைக்ரோசேட் கிளை மேலாளர் சிவக்குமார் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் வங்கியாளர்கள் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT