Regional03

பெருந்துறை அரசு மருத்துவமனையில் - ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் : அமைச்சரிடம் திருப்பூர் எம்பி மனு

செய்திப்பிரிவு

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி புரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், என ஏஐடியுசி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து திருப்பூர் எம்பி கே.சுப்பராயன் மற்றும் ஏஐடியுசி மாநில செயலாளர் எஸ்.சின்னசாமி ஆகியோர் வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிறப்பு மருத்துவமனையாகச் செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் தூய்மைப்பணி மற்றும் பாதுகாவல் பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களை வேலைக்கு அமர்த்திய தனியார் நிறுவனம், நாள் ஒன்றுக்கு ரூ.490 வீதம் ஊதியம் வழங்குவதாகக் கூறியது. ஆனால், ரூ.300-க்கு குறைவாகவே இவர்களுக்கு ஊதியம் வழங்கி வருகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இதன் பிறகு இதுநாள் வரை ஊதியம் உயர்த்தி வழங்கப்படவில்லை. எனவே, தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வை உடனடியாக வழங்கவும், அதனை முன்தேதியிட்டு அமலாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பின்படி இவர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். இங்கு ஏற்கெனவே பல ஆண்டுகளாகப் பணியாற்றிவரும் 30-க்கும் மேற்பட்ட டிஜிஎன்எம் பயிற்சி முடித்த செவிலியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். சுகாதாரத்துறை மூலம் பணியமர்த்தப்பட்டுள்ள 200 பல்நோக்கு மருத்துவப் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஜுன்மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT