உதகையில் பெற்ற குழந்தைகளை விற்பனை செய்த பெற்றோரை போலீஸார் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்த காந்தல் பகவதியம்மன் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்த தம்பதி ராபின் (29), மோனிஷா(26). இருவரும் காதலித்து வீட்டின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஓர் ஆண், 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. கரோனா காலத்தில் வாழ்வாதாரம் இன்றி இருந்ததாலும், மழையால் வீடு சேதமடைந்ததாலும் குழந்தைகளை பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், 3 வயதுடைய முதல் பெண் குழந்தையை, மோனிஷாவின் அக்கா பிரவீனாவிடம் ஒப்படைத்தனர். 2-வது பெண் குழந்தையை ராபினின் நண்பர் உதவியுடன் திருப்பூரைச் சேர்ந்த நிசார்பாய் என்பவருக்கு ரூ.25 ஆயிரத்துக்கும், 3 மாதங்களேயான ஆண் குழந்தையை சேலம் பகுதியைச் சேர்ந்த உமா மகேஸ்வரி, பூபதி தம்பதிக்கு ரூ.30 ஆயிரத்துக்கும் விற்பனை செய்துள்ளனர்.
இந்நிலையில், மது போதையில் ராபின், மோனிஷா இருவரும் பிரவீனா வீட்டுக்கு சென்று குழந்தையை தரும்படியும், அந்த குழந்தையை விற்க வேண்டும் என்றும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அச்சமடைந்த பிரவீனா, வழக்கறிஞர் கங்காதரன் என்பவர்மூலம் சமூகநல துறை அலுவலர் தேவகுமாரிக்கு தகவல் அளித்துள்ளார்.
அதன்பின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரபு மற்றும் சமூக நல அலுவலர் சார்பில் சமூக நலப் பணியாளர் தவமணி மற்றும் குழுவினர் காந்தல் பகுதிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர், உதகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், காவல் ஆய்வாளர் கண்மணி தலைமையிலான போலீஸார், திருப்பூர் மற்றும் சேலத்துக்கு சென்று குழந்தைகளை மீட்டு வந்ததோடு, ராபின், மோனிஷாவை கைது செய்தனர்.
மேலும் குழந்தையை வாங்கியவர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது. அவர்களும் கைது செய்யப்படுவர் என போலீஸார் தெரிவித்தனர்.