காளையார்கோவில் அருகே வடக்குமாரந்தையில் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநருக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்ற கிராம மக்கள். 
Regional02

காளையார்கோவில் அருகே 20 ஆண்டு போராட்டத்துக்கு பின் - கிராமப் பகுதிக்கு இயக்கப்பட்ட அரசு பேருந்து : ஆரத்தி எடுத்து வரவேற்ற மக்கள்

செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே 20 ஆண்டுகள் போராட்டத்தின் பலனாக அரசு பேருந்து இயக்கப்பட்டதை அடுத்து கிராம மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

காளையார்கோவில் அருகே சூராணத்தை சுற்றி இலந்தக்கரை, கோடிக்கரை, கூத்தக்குடி, தவளிமண்டபம், வடக்கு மாரந்தை உட்பட 25 கிராமங்கள் உள்ளன. அப்பகுதிக்கு மதுரையில் இருந்து சூராணத்துக்கு அரசு பேருந்து இயக்கப் பட்டு வருகிறது. ஆனால், அந்த பேருந்து இரவு 9 மணிக்கே அப்பகுதிக்கு வரும். மேலும் அதிகாலை 5 மணிக்கு சென்றுவிடும். இதனால் அந்த பேருந்து இயக்கத்தால் அப்பகுதி மக்களுக்கு பயனில்லாத நிலை இருந்தது.

இதையடுத்து பகல் நேரத்தில் பேருந்தை இயக்க வேண்டுமென, 20 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் போராடி வந்தனர். இக்கோரிக்கையை ஏற்று சிவகங்கையில் இருந்து ஆர்.எஸ்.மங்கலத்துக்கு தற்போது அரசு பேருந்து விடப்பட்டுள்ளது.

இந்த பேருந்து சிவகங்கையில் இருந்து காளையார்கோவில், வடக்கு மாரந்தை வழியாக ஆர்.எஸ்.மங்கலம் செல்கிறது. இதனை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.

20 ஆண்டுகள் போராட்டத்தின் பலனாக இயக்கப்பட்ட பேருந் துக்கு வடக்கு மாரந்தை மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். ஓட்டுநர், நடத்துநருக்கு பொன்னாடை போர்த்தினர்.

SCROLL FOR NEXT