கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) முத்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்த கட்டுமானத் தொழிலாளர்கள் சிலர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களின் குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
எனவே, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் விவரங்களைத் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தில் பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களாக இருந்து கரோனா தொற்றில் உயிரிழந்த பெற்றோரில் ஒருவர் அல்லது தாய், தந்தை இருவரையும் இழந்த குழந்தைகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. குழந்தைகளின் விவரங்களை சேலம், கோரிமேடு ஏற்காடு மெயின் ரோடு, வேலைவாய்ப்பு அலுவலகம் அருகில் இயங்கி வரும் சேலம், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தில் தகவல் அளிக்கலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.