கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் சில பகுதிகளில் கேரளாவைப் பின்பற்றி ஒருநாள் முன்னதாக நேற்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது.
பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. அதே நேரம் வளைகுடா நாடுகளிலும், கேரளாவிலும் நேற்றே பக்ரீத் பண்டிகை கொண்டாட்டங்கள் நடைபெற்றன. கேரளாவின் பக்கத்து மாவட்டமான கன்னியாகுமரியில் நாகர்கோவில், தக்கலை, குளச்சல், குலசேகரம், களியக்காவிளை, மார்த்தாண்டம் உள்ளிட்ட சில பகுதிகளிலும் நேற்று பக்ரீத் கொண்டாடப்பட்டது.
நாகர்கோவில் கோட்டாறு இமாம் அல் மஸ்ஜிதுல் அஷ்ரப் பள்ளிவாசல், இளங்கடை பள்ளிவாசல் மற்றும் மார்த்தாண்டம், தக்கலை, குலசேகரம் பகுதிகளில் உள்ள பள்ளிவாசல், தர்ஹாக்களில் நேற்று காலை முஸ்லிம்கள் பக்ரீத் சிறப்பு தொழுகை நடத்தினர். பின்னர் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
திருநெல்வேலி மேலப்பாளையத்தில் மஸ்ஜித் தவ்பா ஜமாத் சார்பில், அங்குள்ள பள்ளிவாசல் வளாகத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை நேற்று நடைபெற்றது. பள்ளிவாசல் தலைவர் இக்பால் உசேன் தலைமை வகித்தார். மவுலானா மீரான் தொழுகையை நடத்தினார். ஏராளமானோர் பங்கேற்றனர்.