கடலூர் தேவனாம்பட்டினத்தில் சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரி மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
Regional02

கடலூர், விழுப்புரம், புதுச்சேரி மீனவர்கள் - சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரி தேவனாம்பட்டினத்தில் உண்ணாவிரதம் :

செய்திப்பிரிவு

மீன்பிடிக்க சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்கக்கோரி கடலூர் தேவனாம்பட்டினத்தில் கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநில மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்திகடலூர், விழுப்புரம் மாவட்டங் களில் சில கிராமங்களிலும், புதுச்சேரி மாநிலத்தில் சில கிராமங் களிலும் மீன் பிடிக்கப்பட்டு வருகிறது. இதற்கு மற்ற மீனவ கிராமத் தினர் எதிர்ப்பு தெரிவித்ததோடு நீதிமன்றத்திற்கும் சென்றனர். இப்பிரச்சினை தொடர்பாக மீனவர் கிராமத்தினரிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனால் சுருக்குமடி வலை மற்றும் 40 மில்லி மீட்டருக்கு குறைவான கண்ணிகளைக் கொண்ட இழுவை வலைகளுக்கு எதிராக மாவட்ட நிர்வாகம் கடந்த சில நாட்களாக கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரி கடலூர் தேவனாம்பட்டினத்தில் மீனவர்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம், நல்லவாடு, சொத்திக்குப் பம், ராசாப்பேட்டை உள்ளிட்ட 15 கிராமத்தினரும், விழுப்புரம் மாவட்டத்தில் அனுமந்தை, கூனிமேடு உள்ளிட்ட 19 கிராமத்தி னரும், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து கீரப்பாளையம், பனித் திட்டு, மூர்த்திகுப்பம் உள்பட 16 கிராமங்ளில் இருந்தும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர். உண்ணாவிரதத்தில் மீனவ பெண் களும் கலந்து கொண்டனர்.

இப்போராட்டம் குறித்து மீனவர் சங்கத் தலைவர் பெருஏகாம்பரம் கூறுகையில், "சுருக்குமடி வலையை பயன்படுத்தி சூறை, கானாங்கெளுத்தி, மத்தி ஆகிய 3 வகை மீன்களை மட்டுமே பிடிக்க முடியும். அதுவும் 6 மாதத்திற்கு மட்டுமே இந்த மீன்களை பிடிக்கமுடியும். தண்ணீரின் மேற்பரப் பிற்கு கூட்டமாக வரும் இந்த மீன்கள் இடம் பெயர்ந்து கொண்டேஇருக்கும். எனவே, இதனை பிடிப்பதால் மற்ற மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே,சுருக்குமடி வலைக்கான தடையை நீக்கி அந்த வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன் உண்ணாவிரதம் நடைபெறும் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். கடலூர் எஸ்பி சி.சக்திகணேசன் தலைமையில் சுமார் 300 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மீனவர்கள் திடீரென கடலுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு விடக்கூடாது என்று 2 படகுகளில் போலீஸார் கடலுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

SCROLL FOR NEXT