சேலம் மாவட்டத்தில் கரும்புக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க கூடுதல் மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்பாக சேலம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கணேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சேலம் மாவட்டத்தில் 6000 ஹெக்டர் பரப்பில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. கரும்பு பயிருக்கு சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கூடுதல் மானியம் வழங்கப்பட உள்ளது. சொட்டு நீர் பாசனத்துக்கு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது.
கரும்பு பயிரிடும் சிறு, குறு விவசாயிகளுக்கு திறந்தவெளி கிணறு மூலம் மேற்பரப்பு சொட்டு நீர் பாசனக்கருவி அமைப்பதற்கு, வழக்கமான பயிர் மானியம் ஒரு ஹெக்டேருக்கு ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 133 வழங்கப்படுகிறது. தற்போது ரூ.1 லட்சத்து, 51 ஆயிரத்து 368 வழங்கப்பட உள்ளது. இதர விவசாயிகளுக்கு ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 115 வழங்கப்பட உள்ளது.
ஆழ்குழாய் கிணற்றில் இருந்து மேற்பரப்பு, சொட்டுநீர் பாசனம் அமைக்க மானியமாக ரூ.1 லட்சத்து 37 ஆயிரத்து 844 வழங்கப்படுகிறது.
சொட்டு நீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை நகல், ஆதார் கார்டு நகல், நிலவரைபடம், மூன்று போட்டோக்கள் ஆகிய ஆவணங்களுடன் வட்டார வேளாண்மை உதவி இயக்குநரை அணுகி பெயரை பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.