Regional02

தமிழகத்தில் பெற்றோர் இருவரில் ஒருவரை இழந்தவர்கள் 3,593 பேர் - கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் 93 பேர் : தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் தகவல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் இதுவரை கரோனா பாதிப்பால் 93 குழந்தைகள் பெற்றோரையும், 3,593 பேர் பெற்றோர் இருவரில் ஒருவரையும் இழந்துள்ளனர் என தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தெரிவித்தார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையில் ஆணைய உறுப்பினர்கள் வி.ராமராஜ், ஐ.முரளிகுமார் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

குழந்தைகளுடன் தொடர்புடைய அரசின் 20 துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்ற இக்கூட்டத்துக்கு ஆட்சியர் சு.சிவராசு முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் த.பழனிகுமார், மாநகர காவல் துணை ஆணையர் ஆர்.சக்திவேல் (சட்டம்-ஒழுங்கு), மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர், ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘கரோனா 3-வது அலை ஏற்பட்டால், குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக் கைகள் குறித்து குழந்தைகளுடன் தொடர்புடைய அனைத்து அரசுத் துறை அலுவலர்களுடனும் மாவட்டம் வாரியாக ஆய்வுக் கூட்டம் நடத்தி வருகிறோம்.

தமிழகத்தில் கரோனா பாதிப்பால் தாய் - தந்தை ஆகிய இருவரையும் இழந்த குழந்தைகள் 93 பேர் மற்றும் இருவரில் ஒருவரை மட்டும் இழந்த குழந்தைகள் 3,593 பேர் என இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.

தொடர்ந்து, சமூக நலத் துறையினர் இந்த ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்’’ என்றார்.

SCROLL FOR NEXT