கொடுமுடி அருகே குடும்பத் தகராறு காரணமாக 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், கொடுமுடியை அடுத்த வீரப்பகவுண்டன்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபுசங்கர் (40). விவசாயி. இவரது மனைவி சசிகலா (33). இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகனும், 10 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, பிரபுசங்கர் - சசிகலா இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த சசிகலா, தனது இரு குழந்தைகளுக்கும் விஷ மாத்திரைகளைக் கொடுத்ததோடு தானும் சாப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர் நள்ளிரவு 2 மணியளவில் கணவர் பிரபுசங்கரிடம், விஷ மாத்திரை சாப்பிட்டது குறித்து சசிகலா தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, மூவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தனர். மலையம்பாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.