தனியார் சுயநிதி பள்ளிகளில் நலிவடைந்த பிரிவினருக்கான கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீதம் இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நடப்பு கல்வியாண்டில் (2021-2022) இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீதம் இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கு நாளை (5-ம் தேதி) முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை rte.tnschools.gov.in என்ற இணையதளம் வழியாக பெற்றோர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை பள்ளியில் இணைய வழியில் பதிவேற்றம் செய்யலாம் அல்லது அருகில் உள்ள வட்டார வள மையங்கள், வட்டாரக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் அளித்து இணைய வழியில் பதிவேற்றம் செய்து அதற்கான ஒப்புகைச் சீட்டினை பெற்றுக் கொள்ள வேண்டும்.
இச்சேர்க்கைக்கு மாணவர் களின் பெற்றோர்கள் குடியிருக்கும் 1 கிமீ சுற்றளவில் உள்ள சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளியில் நுழைவுநிலை வகுப்பான எல்கேஜி வகுப்பில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பாக அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளின் பிரதான நுழைவு வாயில் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் 6-க்கு 10 என்ற சதுர அடி அளவில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.