Regional02

மனைவியை கொன்ற ராணுவ வீரர் கைது :

செய்திப்பிரிவு

தேனி பாரஸ்ட் ரோடு 12-வது தெருவைச் சேர்ந்த சிவகுமார் மகன் ஈஸ்வரன் (25), ராணுவ வீரர். இவருக்கும் உசிலம்பட்டியை சேர்ந்த செல்வம் மகள் கிரிஜாவுக்கும் (23) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது.

உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வரதட்சணை புகார் தரப்பட்டதால் ஈஸ்வரன் மீது வழக்குப் பதியப்பட்டது. அவர் சஸ்பென்ட் செய்யப்பட்டார். பின்னர் சமாதானம் ஏற்பட்டு மீண்டும் மனைவியுடன் ஈஸ்வரன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கிரிஜாவைக் காண அவரது தந்தை வந்தபோது, வீட்டைக் காலி செய்துவிட்டுச் சென்றிருப்பது தெரிய வந்தது. சந்தேகம் அடைந்த அவர், தேனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து தேனி காவல் சார்பு ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையிலான தனிப் படையினர் தலைமறைவான ஈஸ்வரனை தேடி வந்தனர்.

இந்நிலையில் திருவாரூரில் இருந்த ஈஸ்வரனை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். விசாரணையில், கிரிஜாவை கடந்த 2019 டிசம்பர் 25-ம் தேதி கொலை செய்து அரண்மனைப்புதூர் முல்லைபெரியாற்றில் மூட்டையில் கட்டி வீசிவிட்டதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து காவல் துணை கண்காணிப்பாளர் முத்துராஜ் தலைமையில் ஆற்றங்கரையில் சோதனை செய்தனர். கொலைக்கு உடந்தையாக இருந்திருக்கலாம் என்ற கோணத்தில் ஈஸ்வரனின் தம்பி சின்ன ஈஸ்வரன், அவரது தாயார் செல்வி ஆகியோரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT