சிவகங்கை அருகே வல்லனி அரசு பள்ளியில் மாணவிக்கு பொன்னாடை போர்த்தி, மரக்கன்று கொடுத்து வரவேற்ற ஆசிரியர்கள், கிராம மக்கள். 
Regional02

சிவகங்கை அருகே சொந்த செலவில் மழலையர் வகுப்புகளை தொடங்கி - மூடும் நிலையில் இருந்த அரசு பள்ளியை மீட்ட ஆசிரியர்கள் :

இ.ஜெகநாதன்

சிவகங்கை அருகே சொந்த செலவில் மழலையர் வகுப்பு களைத் தொடங்கி மூடும் நிலையில் இருந்த அரசு பள்ளியை ஆசிரியர்கள் மீட்டெடுத்துள்ளனர்.

சிவகங்கை அருகே வல்லனியில் 1972-ம் ஆண்டு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி தொடங்கப்பட்டது. இந்நிலையில் 7 ஆண்டுகளுக்கு முன்பே தனியார் பள்ளி மோகத்தால், இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை சரிந்தது. இதனால் 7 மாணவர்களே இருந் தனர். மூடும் நிலையில் இருந்த இப்பள்ளியை கிராம மக்கள் ஒத்துழைப்போடு தலைமை ஆசிரியர் பாமா, ஆசிரியர் மாலா ஆகியோர் மீட்க முடிவு செய்தனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, தங்களது முயற்சியால் எல்கேஜி, யுகேஜி மழலையர் வகுப்புகளைத் தொடங்கினர். அங்கு கற்பிக்கும் ஆசிரியருக்கு தங்களது சொந்த பணத்தில் ஊதியம் வழங்கி வருகின்றனர். மேலும் நன்கொடை பெற்று பள்ளிக்குத் தேவையான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், இருக்கைகள், மின்விசிறி போன்ற வசதிகளை ஏற்படுத்தினர்.

இதையடுத்து, படிப்படியாக மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. வல்லனி, ரோஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 49 மாணவர்கள் படிக்கின்றனர். நேற்று 50-வதாக தர்ஷினி என்ற மாணவி ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தார். அச்சிறுமியை தலைமை ஆசிரியர் பாமா, ஆசிரியர் மாலா மற்றும் கிராம மக்கள் சார்பில் எழுத்தாளரும், முன்னாள் மாணவருமான ஈஸ்வரன் பொன்னாடை போர்த்தி, மரக்கன்று கொடுத்து வரவேற்றார். மேலும் மழலையர் வகுப்பில் 20-க்கும் மேற்பட்டோர் சேர்ந்துள்ளனர்.

SCROLL FOR NEXT