TNadu

போலீஸார் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்ததாக புகார் - சாத்தான்குளத்தில் சிபிசிஐடி மீண்டும் விசாரணை :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே போலீஸார் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்ததாக கூறப்பட்ட புகார் தொடர்பாக, மதுரை சிபிசிஐடி போலீஸார் நேற்று மீண்டும் சாட்சிகளிடம் விசாரணை நடத்தினர்.

சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளத்தைச் சேர்ந்த மந்திரம் மகன் மகேந்திரன் (28). இவரை ஒரு கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் போலீஸார் 2020 மே 23-ம் தேதி விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். மறுநாள் விடுவிக்கப்பட்ட மகேந்திரன் ஜூன் 11-ல் இறந்தார்.

போலீஸார் கடுமையாக தாக்கியதால்தான் மகேந்திரன் இறந்ததாக கூறி, அவரது தாய் வடிவு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இப்புகார் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டது.

அதன்பேரில், முதலில் சாத்தான்குளம் போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. திருநெல்வேலி சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். இவ்விசாரணையில் தொய்வு ஏற்பட்டதாக உயர் நீதிமன்றத்தில் வடிவு புகார் தெரிவித்தார். அதன்பேரில், இந்த வழக்கு மதுரை சிபிசிஐடி போலீஸுக்கு மாற்றப்பட்டது. மதுரை சிபிசிஐடி டிஎஸ்பி முரளிதரன் நேற்று, தூத்துக்குடியில் விசாரணை நடத்தினார்.

சம்பவத்தன்று போலீஸ் நிலையத்தில் மகேந்திரனுடன் இருந்த யாக்கோபு ராஜ், மகேந்திரனின் சகோதரி சந்தனமாரி உள்ளிட்ட 3 பேர் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் நேற்று காலை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார்கள். அவர்களிடம் டிஎஸ்பி முரளிதரன் தீவிர விசாரணை நடத்தினார்.

SCROLL FOR NEXT