முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து திரவ மருத்துவ ஆக்சிஜன் மற்றும் கரோனா 3-ம் அலைக்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள ரூ.100 கோடி ஒதுக்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக மக்கள் அனைவரும் தமிழக அரசின் கரோனா தடுப்பு முயற்சிகளுக்கு கைகொடுக்கும் வகையில் நிதி வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதற்கிணங்க, ஜூன் 29-ம் தேதி வரை ரூ.353 கோடி நன்கொடையாக பெறப்பட்டுள்ளது.
முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் நன்கொடைகள், கரோனா நிவாரணப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்என்று முதல்வர் உறுதி அளித்திருந்தார். இதுவரை பெறப்பட்டுள்ள நிதியில் இருந்து, ரெம்டெசிவிர் போன்ற உயிர்காக்கும் மருந்துகளை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்காகவும், மற்ற மாநிலங்களில் இருந்து திரவ ஆக்சிஜனை ரயில் போக்குவரத்து மூலம்கொண்டுவர தேவையான கன்டெய்னர்களை வாங்கவும், முதல்கட்டமாக ரூ.50 கோடியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2-ம் கட்டமாக கரோனா பரவலைகட்டுப்படுத்த ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தினசரி 1.6 லட்சம் அளவுக்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை கருத்தில் கொண்டு இப்பரிசோதனைகளை மேற்கொள்ள ஆர்டிபிசிஆர் கிட்களை வாங்க ரூ.50 கோடியை வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து, சிப்காட் நிறுவனம் மூலம், சிங்கப்பூர் மற்றும் பிறநாடுகளில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் இதர மருத்துவக் கருவிகளை வாங்க ரூ.41.40 கோடியும், கருப்பு பூஞ்சை சிகிச்சைக்காக தேவைப்படும் ஆம்போடெரிசின் உள்ளிட்ட அனைத்து உயிர்காக்கும் மருந்துகளை வாங்க ரூ.25 கோடியும் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டிருந்தார்.
தற்போது முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து கரோனா சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் திரவ மருத்துவ ஆக்சிஜன் மற்றும் கரோனா3-ம் அலை தொடர்பான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவும் ரூ.100 கோடி ஒதுக்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.