தி.மலை மாவட்டம் புதுப்பாளை யம் அடுத்த பெரியேரி கிராமத்தில் வசிப்பவர் லாரி ஓட்டுநர் ரமேஷ். இவர், செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று மாலை மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது, அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் அவரது செயலை தடுத்தி நிறுத்தினர்.
பின்னர் அவரிடம் வட்டாட்சியர் மனோகரன் விசாரணை நடத்தி னார். அப்போது ரமேஷ் கூறும்போது, “எனது குடும்பத்துக்கு சொந்தமான ஓர் ஏக்கர் நிலத்தை அடமானமாக வைத்து, எறையூர் கிராமத்தில் வசிக்கும் ஒருவரிடம் கடந்த 15 மாதங்களுக்கு முன்பு ரூ.5 லட்சம் கடன் பெற்றேன். இதற்காக, மாதம் ரூ.10 ஆயிரம் வட்டி என்றும் மற்றும் 3 ஆண்டுகளில் கடன் பைசல் செய்யப்படும் என ஒப்பந்தம் போடப்பட்டது.
இந்நிலையில் வட்டியுடன் கடன் தொகையை திருப்பி செலுத்தி எனது நிலத்தை மீட்க முயன்றேன். ஆனால், அதனை ஏற்க மறுத்த கடன் கொடுத்த நபர், நிலத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என்றால் ரூ.5 லட்சமும், கடனுக்கு மாதம் ரூ.50 ஆயிரம் என கணக்கீட்டு வட்டி கொடுக்க வேண்டும் என நிர்ப்பந்தம் செய்கிறார். அரசு பணியில் இருப்பதால், தன்னை எதுவும் செய்ய முடியாது என்கிறார். எனது நிலத்தை மீட்டுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இது குறித்து இரண்டு தரப்பிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர் உறுதி அளித்தார்.