Regional02

நகராட்சி நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்தக் கோரி - ராமநாதபுரத்தில் மாணவர்கள், பெற்றோர் தர்ணா :

செய்திப்பிரிவு

ராமநாதபுரத்தில் நகராட்சி நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி மாணவர்கள், பெற்றோர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் நகரில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் இல்லை. இதனால் ராமநாதபுரத்தில் இயங்கி வரும் நகராட்சி வள்ளல் பாரி நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்ற மாணவர்கள் 9-ம் வகுப்பு எந்தப் பள்ளியிலும் சேர முடியாமல் உள்ளனர்.

இதையடுத்து, இப்பள்ளியில் படித்த 15 மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் நேற்று வள்ளல்பாரி நகராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்தில் அமர்ந்து, நடப்பு கல்வியாண்டிலேயே நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் எனக்கோரி தர்ணாவில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர் முத்துச்சாமி உள்ளிட்ட கல்வி அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இன்னும் 15 நாட்களில் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும். அப்போது மாணவர்களை சேர்த்துக் கொள்கிறோம். அதுவரை 8-ம் வகுப்புபயின்ற மாணவர்கள் 15 பேரை, சக்கரக்கோட்டை அரசுஉயர்நிலைப் பள்ளியில் சேர்க்குமாறு முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்தார். இதையடுத்து போராட்டத்தைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT