Regional02

எருமப்பட்டியில் வளர்ச்சித் திட்டப்பணி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆய்வு :

செய்திப்பிரிவு

நாமக்கல் அருகே எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சித்திட்ட பணிகளை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எ.வாழவந்தி ஊராட்சியில் சுகாதார வளாகம் கட்டப்பட்டு வருகிறது. மேலும், ரூ.69.90 லட்சம் மதிப்பில் மகளிர் சுய உதவிக்குழு சமுதாயக்கூடம் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றை ஆட்சியர் ஸ்ரேயா சிங் ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்தும் முறையாகவும் மேற்கொள்ளும்படி அறிவுறுத்தினார்.

தொடர்ந்து எருமப்பட்டி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்த ஆட்சியர் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை, மருந்து இருப்பு விவரம் உள்ளிட்டவற்றை கேட்டறிந்தார். முன்னதாக எருமப்பட்டியில் நடைபெறும் கரோனா நோய் தடுப்பு பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார். மேலும், சேந்தமங்கலம் அருகே ஜம்புமடை கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் பொருள் இருப்பு குறித்து ஆய்வு செய்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கோ.மலர்விழி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருளப்பன், குணாளன் ஆகியோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT