தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் பைனான்சியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
சாத்தான்குளம் தைக்கா தெருவைச் சேர்ந்த செல்லப்பா மகன் மார்ட்டின் (45). வட்டித் தொழில் செய்து வந்தார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மைதீன் மீரான் (33) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 10-ம் தேதி இரவு மார்ட்டின் மோட்டார் சைக்கிளில் சாத்தான்குளம் பள்ளிவாசல் அருகே வந்த போது ஒரு கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக சாத்தான்குளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த பாபு சுல்தான் (50), புஹாரி (29), ரஸ்ருதியீன் (29), பாரீஸ் (25), ஜிந்தா (27) மற்றும் அப்துல் சமது (45) ஆகிய 6 பேரை ஏற்கெனவே கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வந்தனர்.
இந்நிலையில் இக்கொலையில் தொடர்புடைய சாத்தான்குளம் நடுத்தெருவைச் சேர்ந்த மைதீன் மீரான் (30) மற்றும் தைக்கா தெருவைச் சேர்ந்த பாபு சுல்தான் மகன் முகமது பிலால் (21) ஆகிய இருவரையும் தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர்.