Regional01

கடலூர், அரியலூர் மாவட்டங்களில் - ஹைட்ரோ கார்பன் திட்ட ஆய்வுக்கு அரசு அனுமதி அளிக்கக் கூடாது : தமிழக முதல்வருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள்

செய்திப்பிரிவு

ஹைட்ரோ கார்பன் ஆய்வு கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை:

அரியலூர் மாவட்டத்தில் 10 ஹைட்ரோ கார்பன் ஆய்வுக் கிணறுகளும், கடலூர் மாவட்டம் நெய்வேலி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 5 ஆய்வுக்கிணறுகளும் அமைப்பதற்கு அனுமதி கோரி மாநில சுற்றுச்சூழல் மதிப்பீடு ஆணையத்திற்கு ஓஎன்ஜிசி நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது.

இதற்கிடையே புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்கக் கூடாது. 3-ம் கட்ட ஏலத்தை நிறுத்தவேண்டும் என்று மத்திய அரசுக்குதமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி முழுமையாக ஒரு வாரம் கூட ஆகவில்லை. அதற்குள்ளாக, அரியலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி கோரியிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி செய்ய தேவைப்படும் அனுமதிகளை தமிழக அரசு ஒருபோதும் வழங்காது என தெரிவித்துள்ளார். ஆனால், அதையெல்லாம் மதிக்காத ஓஎன்ஜிசி நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி கோரி, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பித்திருப்பது கண்டிக்கத்தக்கது. எனவே, ஓஎன்ஜிசி நிறுவனம் அளித்துள்ள இந்த விண்ணப்பத்தை மாநில சுற்றுச்சூழல் துறை நிராகரிக்க வேண்டும். இதற்கான உத்தரவை தமிழக முதல்வர் பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT